'கார்ப்பரேட் பணியை துறந்து, தன் கிராமத் தலைவியாகியுள்ள சவிராஜாவத்: ராஜஸ்தானின் பின் தங்கிய பகுதியான, டோங் மாவட்டத்தின் சோமா என்ற கிராமத்தில், என் தாத்தா ரகுவீர் சிங், மூன்று முறை ஊராட்சி தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்திற்கு பணியாற்ற சென்றதால், நாங்கள் மட்டும் நகரமயமாகிவிட்டோம். என் தாத்தா, பாட்டி மட்டும் கிராமத்தில் தங்கி விட்டனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரவே, நான் போட்டியிட வேண்டிய நிர்பந்தம். என்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வாபஸ் பெற்று விட்டனர். கிராம மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றேன்.மற்ற மாநில கிராமம் போல் அல்ல என் கிராமம், மழைநீர் மட்டுமே நீராதாரமாக கொண்டது. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அது தான் இங்குள்ள 7,000 பேருக்கும் சோறு போடும். அடிப்படை வசதிகள், சுகாதாரம் என, அனைத்திலும் பின் தங்கிய நிலை தான். நான் தலைவியானவுடன், மழை நீரை சேமிப்பு குறித்து, கிராமத்து பெரியவர்களுடன் விவாதித்து ஏரியை ஆழப்படுத்தினேன்.கிராம மக்கள் உடல் உழைப்பைத் தர, வேகமாக முடிந்தது வேலை. தற்போது ஓரளவு, தண்ணீர் சிரமமின்றி கிடைக்கிறது. ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில், மாநில நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில், மழைநீர் சேமிப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று என் கிராமத்தின் நிலை பற்றி எடுத்துக் கூறியதில், மழைநீர் சேமிப்பிற்காக, 71 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் இன்னும் சில திட்டங்களை என்னால், நிறைவேற்ற முடியும்.படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்திற்காக செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு முன்னேறி விடும்.